Dec 152021
 

2022 புத்தாண்டு பலன்கள் :

கன்னி ராசி:

இந்த புத்தாண்டில் 2022 நவம்பர் மாதம் வரை குரு உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிப்பதால், இது யோகமான சஞ்சாரம் என்று சொல்ல முடியாது. இந்த சஞ்சாரத்தினால், சில பாதிப்புகள் தோன்றலாம். எதுவும் உங்கள் ஜாதகப்படி அமையும் என்பதால், அதையும் கணக்கில் கொள்ளுங்கள். சிலருக்கு கடன் தொல்லை இருந்துகொண்டே இருக்கும். அதன் காரணமாக அவமானங்களும் , மனக் கவலையும் சூழ்ந்தபடியே இருப்பர். உங்களுடைய பிள்ளைகள் மேன்மையாக இருந்தாலும்கூட அவர்களுடைய கவலைகள் உங்களை வாட்டிக்கொண்டே இருக்கும். சிலரது குடும்பத்தில் ஏற்படும் சுபநிகழ்ச்சிகளுக்காக பணம் திரட்ட முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். உங்களுக்காகவோ உங்களுடைய பிள்ளைகளுக்காகவோ வேலை வாய்ப்புக்காகவோ வேறு ஏதாவது முயற்சிகளுக்காகவோ யாரையாவது நம்பி முன்கூட்டியே பணம் கொடுத்தால் ஏமாற்றமே மிஞ்சும். கொடுத்த பணமும் திரும்ப கைக்கு வராது. அதனால், இது போன்ற விஷயங்களுக்கு இது ஏற்ற தருணம் அல்ல. எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இழப்புகளைத் தடுத்துக்கொள்ளலாம்.
பொதுவாக உங்கள் மனத்தில் விரக்தி குடிகொண்டிருக்கும். எந்த விஷயத்திலும் விரைவாக முடிவெடுக்க முடியாமல் மதி மயக்கம் ஏற்படும். அப்போது மனதை ஒருநிலைப்படுத்தி நிதானமாக முடிவெடுப்பது நல்லது. இந்த நிதானம் தவறாக முடிவெடுப்பதைத் தவிர்த்து உங்களை அந்த விஷயத்தில் காப்பாற்றும். தேவையற்ற விஷயங்களிலும் அடுத்தவ்ர் விஷயங்களிலும் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிரிகளாலும், போட்டியாளர்களாலும் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு கல்லீரல், கணையம்,மற்றும் கண்களிலும் கோளாறு ஏற்படும். மயக்கம் கிறுகிறுப்பு , போதை வஸ்துக்களின் பழக்கமும் ஏற்படும். எனவே ஏதாவது தீய பழக்கவழக்கங்கள் இருப்பின், இந்த ஆண்டு முழுவதும் விட்டுவிடுவது நல்லது. அப்போதுதான் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.
இப்போது உங்களுக்கு ‘குருபலம்’ இருக்காது. திசா புத்திப்படி இருந்தாலும், அது சுபபலனாக இருக்காது. எனவே திருமணத் தடங்கல்கள் ஏற்படும். திருமணம் தள்ளிப்போகும். குழந்தையில்லாத தம்பதியருக்கு குழந்தை பிறக்கும் யோகம் அமையாது. பிள்ளைகள் வழியிலும் உங்களுக்கு நிம்மதியான சூழ்நிலை இருக்காது. பிள்ளைகள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்காது. அவர்களுடைய வேலை வாய்ப்பும் இழுபறியாகவே இருக்கும். நல்ல நிலையில் உள்ள பிள்ளைகள்கூட உங்களைக் கவனிக்கமாட்டார்கள். மனைவி பேச்சைக் கேட்டுக்கொண்டு, உங்களை அலட்சியம் செய்துவிட்டு, மனைவி வீட்டோடு போய்விடக்கூடிய சூழ்நிலையும்கூட ஏற்படும். பிள்ளைகள் வழியில் மனக்கவலைதான் மிஞ்சும்.
வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தை கவனத்துடன் பார்த்துக்கொள்வது நல்லது. நண்பர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் பார்த்துக்கொண்டால்தான் நட்பு பகையாக மாறாமல் தடுக்கலாம்.
பணம் வரும் வழி அத்தனை எளிதாக இருக்காது. தொழில், வியாபாரம் மந்தமாக இருப்பதனால் இந்த பொருளாதார மந்தநிலை ஏற்படும். உங்களுக்குப் பணம் கொடுக்கவேண்டியவர்கள் கொடுக்காமல் கால தாமதப்படுத்துவார்கள். ஆனால், நீங்கள் கொடுக்க வேணடிய பணத்தை, கொடுத்தவர்கள் உங்களைத் துரத்தித் துரத்தி வந்து உங்களைப் பணம் கேட்பார்கள். பண விஷயத்தில் யாருக்கும் வாக்கு கொடுத்தால் நீங்கள் வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகும். நாணயமற்றவர் என்ற அவப்பெயர் வரக்கூடும். குறைவான வருமானத்தால், குடும்பத்தாரின் அவசியமான தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் போகும். அதன் காரணமாக குடும்பத்தினருக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு கருத்து வேறுபாட்டில் முடியும். எனவே சமாதானப்படுத்தும் விதமாகப் பேசவேண்டும. அதை விட்டுவிட்டு உங்கள் நிலைமையை யாரும் புரிந்துகொள்ளவில்லையே என்ற ரீதியில் பேச ஆரம்பித்தால், சண்டைதான் வரும்.
உங்களுடைய முயற்சிகள் வெற்றியடைய நீங்கள் பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். உங்களிடம் உதவி பெற்றுவரும் நண்பர்களும் உறவினர்களும்,இப்போது உங்களுக்கு உதவ முடியாமல் போகும். அவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு உங்களைவிட்டு விலகிப் போவார்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு கூடும். மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகும் சூழ்நிலைகள் அடிக்கடி உருவாகலாம். சிலருக்கு விருப்பமில்லாத பணிமாற்றம் ஏற்படலாம். சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக மறைமுகமாக செயல்படுவார்கள். வரவேண்டிய பணிஉயர்வுகள் தாமதப்படலாம். வீடு வாகனங்கள் விரயச் செலவைக் கொடுக்கும். உங்கள் மதிப்பும் புகழும் குறையக்கூடும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவி கிடைக்காமல் போகும்.
தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளால் சில தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் படிப்பு, வேலை வாய்ப்பு முதலியவற்றில் சில தடைகள் ஏற்படலாம். இந்த காலம் முடிந்த பிறகுதான் குறைகள் நீங்கும். குலதெய்வ வழிபாட்டில் தாமதம் ஏற்படும். பூர்வீகச் சொத்தில் சிலருக்கு விலல்ங்க விரயங்கள் ஏற்ப்டலாம். உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கைகொடுக்க முடியாமல் போகும்.
பிரதோஷ காலங்களில் சிவன் கோவிலுக்குச் சென்று சிவனை வழிபட்டால், தீய பலன்கள் வெகுவாகக் குறையும்.
குரு பார்வைகளால் சிற்சில நன்மைகள் கிடைக்கவும் வழி தெரிகிறது. ஒரு பார்வை ஜீவன ஸ்தானத்தில் பதிவதால், தொழில், உத்தியோகம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஓரளவு குறையும். இரண்டாவது சுபப் பார்வை விரய ஸ்தானத்தில் பதிவதால், செலவுகள் அதிகமாகும். இதன்மூலம் உங்கள் சுக போகங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி, வசதியான வாழ்வுக்கு அடிகோல முடியும். மூன்றாவது சுபப் பார்வை உங்கள் குடும்ப-வாக்கு ஸ்தானத்தில் பதிவதால், குடும்பத்து செலவுகளுக்குத் தேவையான பண வரவு ஓரளவுக்கு கை கொடுக்கும்..
பரிகாரம்:
வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தி கோவிலுக்குச் சென்று, கொண்டக்கடலை மாலையும், மஞ்சள் மலர் மாலையும் சாத்தி வழிபட்டால், துன்பம் விலகும்.சனிக் கிழமைகளில் சனீஸ்வரனை எள் தீபம் ஏற்றி வழிபோடவும்.
வாழ்க வளமுடன்!
#################
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]
^^^^^^^^^^^^^^^^^^^^^^

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)